அகமதாபாத்: குஜராத்தில் பாஜ முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பானுசாலி கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் பாஜ எம்எல்ஏ சபில் படேல், அமெரிக்காவுக்கு தப்பி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம், அப்தாசா சட்டப்பேரவை தொகுதியில் 2007 முதல் 2012ம் ஆண்டு வரை பாஜ எம்எல்ஏ.வாக இருந்தவர் ஜெயந்தி பானுசாலி (53). 2012ல் நடந்த தேர்தலில், இவரை காங்கிரஸ் வேட்பாளர் சபில் படேல் தோற்கடித்தார். பின்னர், 2 ஆண்டுகளில் சபில் படேல் பாஜ.வில் சேர்ந்தார். இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், பானுசாலிக்கும் சபிலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், பானுசாலியின் அரசியல் வாழக்கைக்கு முடிவு கட்ட சபில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. பானுசாலி ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற சிடி.யை சபில், அவரது கூட்டாளிகள் வெளியிட்டனர்.