8ம் வகுப்பு வரை ஹிந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

டெல்லி : நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 நபர் நிபுணர் குழு புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கடந்த மாதம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த கல்வி கொள்கை இந்திய பாரம்பரியத்தையும் அறிவியலையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே போல அறிவியல் மற்றும் கணிதத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்தை கற்பிக்கவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. எழுத்து வடிவம் இல்லாத மொழி பேசும் பழங்குடி மக்களுக்கு சமஸ்கிருத அடிப்படையிலான பாடம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தகவல்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். இந்தி மொழியை கட்டாயமாக்கும் அம்சம் வரைவு கல்வி கொள்கையில் இடம் பெறவில்லை என ட்விட்டரில் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: