சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழு தனது அறிக்கையை முதல்வரிடம் நேற்று அளித்தது. இதையடுத்து தமிழக அரசு நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள பிரச்னையில் நாளை என்ன கூறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு 1-1-2016 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், 21 மாதம் நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் தலைமையில் விசாரணை நடத்த கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக அரசு குழு அமைத்தது. இந்த கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.