மதுரை: திமுக கூட்டணி கட்சிகளின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஐகோர்ட் கிளை அனுமதி தந்துள்ளது. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், சிறப்பு சட்டம் இயற்றக்கோரியும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர், தூத்துக்குடியில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் எதிரில் மாலையில் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி போலீசில் மனு அளித்தோம். ஆனால் போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர்.