திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையின்றி 160 பயணிகள், ஏர் ஏசியா விமானம் மூலம் கோலாலம்பூர் பயணம் செய்ததை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பாக சுங்க அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனையிடுவது வழக்கம். இந்நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றி வரும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை கடந்த மாதம் டிசம்பர் 31ம் தேதியோடு காலாவதியானது. இந்நிலையில் புதுப்பித்த அடையாள அட்டையை விமான நிலைய ஆணையம் இதுவரை வழங்காததால், அதிகாரிகள் பழைய அடையாள அட்டையையே பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து உரிய அடையாள அட்டை இல்லை எனக்கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிகாரிகளை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.