பால்கர்: மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சபாலே பகுதியைச் சேர்ந்தவர் அங்குஷ் சாவ்ரா. இவரது மனைவி சாயா(20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்றுக் காலை சாயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், சாயாவை அவரது கணவர் அங்குஷூம் மாமியார் கமலி ஆகியோர் சபாலேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், சாயாவை பரிசோதித்த அங்கிருந்த டாக்டர், பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் பால்கரில் உள்ள ஊரக அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். நேரம் குறைவாக இருந்ததாலும் சாயா பிரசவ வலியால் துடித்ததாலும் அவரை விரார்-தகானு ரயிலில் ஏற்றி பால்கருக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஓடும் ரயிலிலேயே சாயாவுக்கு பிரசவ வலி அதிகரித்து ஆண் குழந்தை பிறந்தது. ரயிலில் இருந்த சக பெண் பயணிகள் சாயாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதுபற்றி உடனடியாக பால்கர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் ஸ்டேஷன் மாஸ்டர், டாக்டரை உடனடியாக அழைத்தார்.