தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்தித்து திரும்பிய அமெரிக்க வாலிபரிடம் 3வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கடந்த சில நாட்களாக அமெரிக்க வாலிபர் ஒருவர் தங்கியுள்ளார். இவர் தங்கியிருந்த நாட்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், கூட்டமைப்பினரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் மீளவிட்டான், பண்டாரம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று திரும்பியுள்ளார்.நேற்று இவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த வாலிபர், தனது பைக்கில் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பலரை பேட்டி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார், கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த நபர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குறும்பட இயக்குனர் மற்றும் ப்ரிலான்ஸ் எழுத்தாளர் மார்க் ஷில்லா என்பதும், ட்ரான்ஸ் குளோபல் மீடியா என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. கடந்த 26ம் தேதி தென்னிந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் இவர் வந்துள்ளதும் தெரிந்தது.