புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை எதிர்ப்பாளர் பாத்திமா தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் கிளை கடந்த 21ம் தேதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில்,”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த பாத்திமாவின் மனுவுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா எனவும் தமிழக அரசு பதில் மனுவில் தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 21ம் தேதிக்கு அடுத்த விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. அதுவரை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.