திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசியர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் பாஸ்கர் என்பவர் அங்கு பயின்று வரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு பயின்று வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்ற பாஸ்கர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து குழந்தைகள் நல காப்பகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.