வால்பாறை: வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அதேபகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த, பள்ளியில் 80க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் நேற்று அதிகாலை புகுந்த 2 காட்டு யானைகள், சத்துணவு கூடத்தை உடைத்து சேதப்படுத்தின. இரும்பு கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்த யானைகள், உள்ளே வைத்திருந்த அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றது. அதேபோல், தண்ணீர் குழாய் மற்றும் கட்டிடங்களையும் சேதப்படுத்தி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவர்கள் சத்துணவு கூடம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.