சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாத இறுதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்பதால், அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அதிமுக செயற்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கடைசியாக அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுக்குழு ஆண்டு இறுதியில் (டிசம்பர் 31ம் தேதிக்குள்) நடத்தப்படலாம் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழுவை இந்த ஆண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 தினங்களுக்கு முன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு கடிதம் அனுப்பப்படும். ஆனால் இதுவரை யாருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்படவில்லை.