விருதுநகர்: பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடந்து வருகிறது. பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிவகாசி உட்பட 600க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பட்டாசால் சுற்றுசூழல் மாசுபடுவதாகக் கூறி நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக் கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.