மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா ரோட்டில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் பாஸ்கரன் (65). அருகிலேயே இவரது வீடு உள்ளது. கடந்த 6ம் தேதி அதிகாலை பாஸ்கரன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். அசிறிது நேரத்தில் அவரது வீட்டு காவலாளி, பால் வாங்குவதற்காக வெளியே வந்தார். அப்போது துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல், அவரை வீட்டிற்குள் தள்ளிச் சென்றது. கர்சீப்பால் முகத்தை மூடியிருந்த அந்த கும்பல், டாக்டரின் மனைவி மீரா (60), வேலைக்கார பெண் மற்றும் காவலாளி ஆகிய மூவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். இதுபற்றி டாக்டர், மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில், கொள்ளை கும்பல் திருமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. திருமங்கலம் அருகே ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்த கணபதி என்ற குருட்டு கணபதிக்கு (39) கொள்ளையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. முதலில் அவரை தனிப்படை மடக்கியது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பெரிய நெட்ஒர்க் மூலம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. குறிப்பாக, முக்கியப் பிரமுகர்களின் வீடுகளை டார்கெட் வைத்து கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. குருட்டு கணபதியிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது செல்போனில் வந்த அழைப்புகளுக்கு, தங்கள் முன்னிலையில் கணபதியை பேச வைத்துள்ளனர்.