திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பாஜ தலைவர் பத்மநாபன் உண்ணாவிரதம் இருக்கும் பந்தல் அருகே ஐயப்ப பக்தர் ஒருவர் சரண கோஷத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜ சார்பில் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி பாஜ பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு பதிலாக பாஜ தலைவர் பத்மநாபன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நேற்று 3வது நாளாக அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார். உண்ணாவிரத பந்தலில் அவருடன் பாஜவை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர்.