திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 6 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலுமங்காபுரம் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நித்திய பூஜைகளிலும், பிரமோற்சவத்தின் போது அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் மூலமாக நடத்திய பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். இதையடுத்து பத்மாவதி தாயாருக்கு நேற்று புஷ்ப யாகம் நடைபெற்றது. இதையொட்டி, தாயாருக்கு பால், இளநீர், மஞ்சள் உட்பட முலிகை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.