சென்னை: சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில், சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் இரா.மனோகர் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொது செயலாளர் நிஜாம், மாவட்ட தலைவர் ஜெயினுல்லாபுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு காவிரி நதிநீர் ஆணையம் அமைத்த பிறகு காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு ஆணையத்திற்கு தெரிவிக்காமல் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. ஆனால் தற்போது காவிரியில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதியளித்துள்ளது.