காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சேரி கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயிகள். இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் பரமபதநாதர் கோயில், அரசினர் உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்நிலையில் சேரி கிராமத்தில் இருந்து அபிராமசேரி வழியாக காவேரிப்பாக்கம் பகுதிக்கு தார் சாலை சில வருடங்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலையில் சுமார் 3கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.