சென்னை: மறைமுக மதுவிற்பனையை தடுக்க இனி நள்ளிரவிலும் தீவிர ஆய்வினை மேற்கொள்ள டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மறைமுக மதுவிற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த புகார்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது. இந்த மறைமுக மதுவிற்பனை மூலம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால், நகரங்களை தவிர மற்ற இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இதேபோல், பலர் அதிகாலை நேரங்களிலும் மறைமுக மதுவிற்பனை செய்து வருகின்றனர்.இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுகுழு கூட்டத்தில் மறைமுக மதுவிற்பனையை தடுக்க ஒவ்வொரு அதிகாரியும் எடுத்த நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர ஆய்வு குழு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார்.