புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை ரத்து செய்யவோ அல்லது விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவோ கண்டிப்பாக முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாக மறுத்து உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தைப்பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ₹50கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி டிடிவி.தினகரன், ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கர்நாடகாவை சேர்ந்த டிடிவி.தினகரன் நன்பர் மல்லிகார்ஜுனா மற்றும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஹவாலா புரோக்கர்களை டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரை தவிர டிடிவி.தினகரன் அவரது மல்லிகார்ஜுனா உட்பட மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.