ஏரியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் சோகம் உகாண்டாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: மேலும் 60 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

முதிமா: உகாண்டாவில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் நீரில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உகாண்டாவின் விக்டோரியா ஏரியில் 90க்கும் மேற்பட்டோருடன் நேற்று மாலை படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் மது, ஆடல் பாடல் என உற்சாகமாக  இருந்தனர். இந்நிலையில், முகோனோ மாவட்டத்தின் முதிமா  அருகே சென்றபோது படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது.

சம்பவ இடத்துக்கு  சற்று தொலைவில் 2 சிறிய படகுகளில்  இருந்த மீனவர்கள் இதனை பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, அங்கு விரைந்து நீரில் மூழ்கியவர்களை  காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆற்றில் குதித்த பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

காவல்துறையினர் படகு கவிழ்ந்த இடத்திற்கு குழுவினருடன் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். சுமார் 60 பேர் ஏரியில்  மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. வார விடுமுறை நாட்களில் படகில் சென்று விருந்தளித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்றும் அளவுக்கதிகமாக கூட்டத்தை ஏற்றி செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக விபத்து  நடந்திருக்கலாம் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: