தாம்பரம்: தாம்பரம் பகுதிகளில் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்ட சாலையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது, இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளான அடையாறு ஆறு செல்லும் பகுதிகளில் உள்ள பாலங்களை அகலப்படுத்த ஏற்கனவே இருக்கின்ற பழைய பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, 10 கோடியே 48 லட்சம் செலவில் ஆதனூர்-மணிமங்கலம் சாலை, தாம்பரம் - சோமங்கலம் சாலை, திருநீர்மலை - திருமுடிவாக்கம் சாலை பகுதிகளில் உள்ள அடையாறு ஆறு செல்லும் பகுதிகளில் உள்ள பாலங்களை இடித்து புதிய பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டது.
இதையடுத்து, ஆதனூர் - மணிமங்கலம் சாலை, தாம்பரம் - சோமங்கலம் சாலை, திருநீர்மலை - திருமுடிவாக்கம் சாலை ஆகிய 3 இடங்களில் இருந்த பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு, அதன் அருகில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல வசதியாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பெய்த மழை காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.