ஒசூர்: ஒசூர் அருகே சூடுக்கொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த சுவாதி மற்றும் நந்தீஸ் காதல் தம்பதி ஆணவக் கொலை தொடர்பாக 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை கர்நாடகா மாநில காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்ட காவல் துறை காவல் கண்காணிப்பாளர் சிவபிரகாஷ், கடந்த 12 மற்றும் 15-ம் தேதிகளில் காதல் தம்பதியரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதில் இருவரும் ஓசூர் அருகே சூடுக்கொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததாக கூறியிருக்கிறார். ஓசூரில் கொலை செய்தால் தெரிந்துவிடும் என்று நினைத்து சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாண்டியாவில் உள்ள சின்னம்மன் கோவிலுக்கு சென்று வரலாம் என கூறி காதல் தம்பதியை 8-ம் தேதி அழைத்து வந்து கை, கால்களை கட்டி கர்நாடக காவிரி ஆற்றில் வீசி கொலை செய்திருப்பது தெரியவந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.