விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண், வயிற்றில் இருந்த குழந்தை பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அலட்சியமே இதற்கு காரணம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (27) மூன்றாவது பிரசவத்திற்காக இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி ரத்தம் ஏற்றியுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என தெரிகிறது.