தா.பேட்டை: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சோழங்கநல்லூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால சிவலிங்கம் மற்றும் பழமையான துலா கிணறு, முற்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் போன்ற தொன்மையான தடயங்கள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. தற்போது இங்குள்ள ஏரி அருகே உள்ள மண்மேட்டில் சோழர் காலத்தை சேர்ந்த நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்ட அடைவுத்தூண் கண்டறியப்பட்டுள்ளது.முசிறியை சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறியதாவது:சோழர்கள் ஆட்சி காலத்தில் விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல ஊர்களிலும் ஏரிகள், குளங்கள், கிணறுகள் வெட்டப்பட்டன. இவ்வாறு வெட்டப்பட்ட நீர் நிலைகளின் எல்லைகளை குறிக்கும் வகையில் அவற்றின் கரை மதகு போன்ற இடங்களில் இவ்வகை அடைவுத்தூண் நடப்படும். தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள இத்தூண் 4 அடி உயரம் உள்ளது.