கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இந்திய- இஸ்ரேல் நாடுகளின் கூட்டு முயற்சி காரணமாக நவீன தொழில்நுட்பத்தில் விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக உற்பத்தி கிடைப்பதால் கொய் மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொய்மலர்கள் சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, போன்ற மலர்கள் 1,140 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் ரோஜாமலர்கள் உலக தரம் வாய்ந்தவை என்பதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு இந்தியா முழுமைக்கும், பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே தரமான கொய்மலர்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒசூர் அருகே தளியில் இந்திய இஸ்ரேல் நாடுகளின் கூட்டில் இயங்கி வரும் கொய்மலர் மகத்துவ மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மலர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை திட்ட இயக்கத்தின் மூலம் கொய்மலர்கள் சாகுபடி செய்யும் நவீன தொழில்முறைகள் குறித்து மட்டுமல்லாது உர நிர்வாகம், நீர் மேலாண்மை, சந்தை வாய்ப்பு குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற வரும் விவசாயிகள் இங்கு தங்கி, மலர் சாகுபடி குறித்த தெளிவான விளக்கங்களை நேரடி பயிற்சிகள் மூலம் அறிந்து கொள்கின்றனர்.