டிடிவி தினகரன் 18 எம்எல்ஏக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்துவிட்டார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழக அரசியலில் எடுபடாத மனிதர் டிடிவி.தினகரன். அவர் தன்னை நம்பிய 18 எம்எல்ஏக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி சென்னை, நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி,  வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமார் எம்எல்ஏ, கராத்தே தியாகராஜன், பாஜ சார்பில் இல.கணேசன், தமாகா சார்பில்  ஞானதேசிகன், பாமக ஏ.கே.மூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட  பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். டிடிவி.தினகரன் 18 எம்.எல்.ஏ.விற்கு திருநெல்வேலி  அல்வா கொடுத்துவிட்டார்.

அவர் தமிழக அரசியலில் எடுபடாத மனிதர். எந்த காலத்திலும் தமிழக அரசியலில் எடுபடாதவர்தான் இந்த தினகரன். சசிகலா குடும்பத்தை தவிர அடிமட்ட  தொண்டர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வர வேண்டும். அவர்களை அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து  காப்பாற்றுவோம். அண்ணா சொன்னபடி, மறப்போம், மன்னிப்போம் என்ற வழியில்  நாங்கள் அடிமட்ட தொண்டர்களை மீண்டும் தாய் கழகத்திற்கு அழைக்கிறோம். டெங்கு காய்ச்சலுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் முதல்வர் உத்தரவின் பேரில்  மருந்து மாத்திரைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: