சென்னை: ஸ்வைப்பிங் மிஷின் பயன்படுத்துவது குறித்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். சென்னை மண்டலத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஸ்வைப்பிங் மிஷின் பயன்பாடு நடைமுறைக்கு வர உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.4 லட்சம் முதல் ரூ.1 லட்சம் வரையில் நாள் தோறும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதேபோல், நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி வரையிலும் விற்பனை நடைபெறுகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பதும், ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.இது ஒருபுறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழகத்தில் உள்ள 5 மண்டலங்களிலும் அதிகாரிகள் தொடர் ஆய்வு பணியையும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விலை வைத்து விற்பது, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் பணமற்ற பரிவர்த்தனையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வரும் டிசம்பர் இறுதிக்குள் ஸ்வைப்பிங் மிஷின் திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது.