ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜலவார் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை மத்திய அரசிடம் இருந்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கேட்டுள்ளார். இதனால்தான், அவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். தன்னை இந்த நாட்டின் காவலனாக இருக்க அனுமதிக்கும்படி தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் மோடி கேட்டார். ஆனால், அவர் இப்போது நாட்டின் கொள்ளைக்காரனாக மாறிவிட்டார். விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட தள்ளுபடி செய்யாத மோடி, நாட்டின் 15 தொழிலதிபர்களின் ₹3.5 லட்சம் கோடி கடனுக்கு விலக்கு அளித்துள்ளார். தனது கடனை செலுத்த முடியாத விவசாயி, குற்றவாளி. ஆனால், கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு செலுத்தாத தொழிலதிபர்களுக்கு வங்கிகள், சிவப்பு கம்பளம் விரித்து உதவ தயாராக இருக்கின்றன.உங்கள் மாநில முதல்வரின் மகனுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டு லலித் மோடி லண்டனில் அமர்ந்திருக்கிறார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்து, அவருடைய மகளின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு, மெகுல் சோக்ஷி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவ்வாறு ராகுல் பேசினார்.