வங்கதேச பிரதமரை கொல்ல முயற்சி 19 பேருக்கு மரண தண்டனை: கலீதா மகனுக்கு ஆயுள் சிறை

தாகா: வங்கதேசத்தில் 2004ல் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் உட்பட 18 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வங்கதேசத்தின் தாகாவில் கடந்த 2004 ஆகஸ்ட் 21ம் தேதி அவாமி லீக் கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில், தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொண்டார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவரை கொல்வதற்காக அவர் மீது ெவடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 24 பேர் கொல்லப்பட்டனர். ஹசீனா உள்பட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அமைச்சர்கள் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 18 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தாகா விரைவு நீதிமன்ற நீதிபதி ஷாஹத் நுருதீன் நேற்று தீர்ப்பளித்துள்ளார். மேலும், முன்னாள் உள்துறை அமைச்சர் லுத்போசமன் பாபர் உள்ளிட்ட 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தாரிக் ரஹ்மான் மூளையாக செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், ஹசீனாவை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் உறதியாகி இருக்கிறது. இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், கட்சியின் மகளிர் முன்னணி தலைவியும் கட்சித் தலைவர் ஷில்லுர் ரஹ்மானின் மனைவியுமான ஐவி ரஹ்மான் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: