தாய்லாந்தில் பரிதாபம் இரு கோஷ்டிகள் துப்பாக்கிச்சூடு இந்தியர் உட்பட 2 பேர் பலி: பஸ்சுக்காக காத்திருந்த நேரத்தில் பரிதாபம்

பாங்காக்: தாய்லாந்தில் இரு கோஷ்டிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், பஸ்சுக்காக காத்திருந்த இந்தியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு ஏராளமானவர்கள் சுற்றுலா செல்கின்றனர். இதுபோன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். நேற்று முன்தினம் ரத்சத்வி மாவட்டத்தின் சென்டரா வாட்டர்கேட் பெவிலியன் ஓட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அந்தப்பகுதியில் இரு தரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. அவர்கள் துப்பாக்கி, கத்திகள் மற்றும் கம்புகளுடன் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அதில் மூவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்தியரான கக்ரஜர் தீரஜ் என்பவரும், லாவோஸ் நாட்டைச் சேர்ந்த கியோவோங்சா தோனேகியோ என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள், போலீசார் வருவதற்கு முன்பாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் எந்தவிதமான துப்பாக்கியை பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்திலிருந்து ஏகே47 துப்பாக்கி ஒன்றை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: