பாங்காக்: தாய்லாந்தில் இரு கோஷ்டிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், பஸ்சுக்காக காத்திருந்த இந்தியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு ஏராளமானவர்கள் சுற்றுலா செல்கின்றனர். இதுபோன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். நேற்று முன்தினம் ரத்சத்வி மாவட்டத்தின் சென்டரா வாட்டர்கேட் பெவிலியன் ஓட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அந்தப்பகுதியில் இரு தரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. அவர்கள் துப்பாக்கி, கத்திகள் மற்றும் கம்புகளுடன் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.