சென்னை: தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமான எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியி ட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய எச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல், மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்கிறது.
திருப்பத்தூரிலும், சென்னையிலும், தாராபுரத்திலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செய்தி தமிழக மக்கள் மனதில் ரண வேதனையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திருச்சி சோமரசம்பேட்டையில் சிலையின் கைத்தடி உடைக்கப்பட்ட செய்தியும், ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு என்னும் ஊரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செய்தியும் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்கிறது.
பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி எச்.ராஜாதான் எனும் நிலையில், அவரை தமிழக காவல்துறை கைது செய்து தன் கடமையை ஆற்ற வேண்டும் என நேற்று விடுத்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சிலைகளை அவமதிப்பது புதிய வழக்கமாக மாறி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட மிருகங்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீதும், அதற்கு தூண்டியவர்கள் மீதும் மிகக்கடுமையான நடவடிக்கையை தமிழக பினாமி ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி