நெல்லை: தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான கொண்டாட்டங்கள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நெல்லையில் நேற்று தைப்பூச மண்டபத்திற்கு போலீசார் திடீர் பூட்டு போட்டனர்.
தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா வரும் அக்டோபர் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்நதிக்கரையில் உள்ள 144 தீர்த்தக் கட்டங்களில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை கைலாசபுரத்தில் தைப்பூச மண்டபம் மற்றும் அதையொட்டியுள்ள மண்டபங்கள், ஆற்றோர கரைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. தைப்பூச மண்டபத்தில் சிற்பங்களை புதுப்பிக்கும் பணிகள் இரு தினங்களாக நடந்தன. இப்பணிகளை ஆதீனங்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிலையில் நேற்று காலையில் அங்கு மண்டபத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. அப்போது அங்கு வந்த டவுன் ேபாலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி, பாலம் சப் இன்ஸ்பெக்டர் இசக்கித்துரை ஆகியோர் வேலை ஆட்களை வெளியேற்றினர். மண்டபத்திற்கு தாங்கள் கொண்டு வந்திருந்த பூட்டை போட்டுவிட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து மண்டபம் முன்பு தாமிரபரணி புஷ்கர கமிட்டி குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டனர். வேலூர் முன்னாள் கலெக்டரும், புஷ்கர விழா துணை தலைவருமான ராஜேந்திரன், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உட்பட பலர் வந்து விசாரித்தனர்.