சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தில் நடந்த வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், தமிழகத்தில் தொடர்ந்து வெறுப்பு பேச்சுகளை உமிழ்ந்து வரும் பாஜவின் எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வேணுகோபால், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், தமிழ்தேச மக்கள் இயக்கத்தின் தமிழ்நேசன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.