மும்பை: பயணிகளின் புகார்களுக்கு தீர்வு காண இந்திய ரயில்வே தற்போது டிவிட்டர் ஹேண்டிலை பயன்படுத்தி வருகிறது. இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று அனைத்து தொலை தூர ரயில்களிலும் ‘டிரெய்ன் கேப்டன்’ என்ற புதிய பதவியை ஏற்படுத்தி இருக்கிறது. தொலைதூர ரயில்களில் உள்ள இந்த கேப்டன்தான் அந்த ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய புகார்களுக்கு தீர்வு காண வேண்டும். அந்த ரயிலில் செல்லக்கூடிய அனைத்து ரயில்வே ஊழியர்களும் புகார்கள் சம்பந்தமாக கேப்டனிடம் சென்று தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்திய ரயில்வேயின் டிவிட்டர் பக்கத்துக்கு தினசரி 3,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது தவிர ரயிலின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் புகார் புத்தகத்திலும் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.