பட்டா வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தார் கைது: உதவியாளரும் சிக்கினார்

அம்பத்தூர்: பட்டா வழங்க ₹40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பத்தூர் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் சிக்கினார். முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மோகன் கேப்ரியல். காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமீபத்தில், இவர் தனது வீட்டுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது, தாசில்தார் பார்வதி, பட்டா வழங்க ₹1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு மோகன் கேப்ரியல், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எனக் கூறியுள்ளார். இதையடுத்து, தாசில்தார் பார்வதி, ₹40 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டா வழங்க முடியும். இல்லையென்றால், பட்டா வழங்க முடியாது, என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன் கேப்ரியல், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, டிஎஸ்பி சங்கர் அறிவுரையின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர்  தாவிய ₹40 ஆயிரத்தை மோகன் கேப்ரியலிடம் கொடுத்து, அதை தாசில்தாரிடம் தரும்படி கூறியுள்ளனர். அதன்படி, நேற்று பிற்பகல் 3 மணியளவில் மோகன் கேப்ரியல் தாலுகா அலுவலகத்தில் வைத்து, லஞ்ச பணத்தை தாசில்தார் பார்வதியிடம் கொடுக்க முயன்றார். அப்போது, அவர் அலுவலகத்தில் இருந்த அவரது உதவியாளர் முருகன் என்ற முருகானந்தமிடம் தரும்படி கூறியுள்ளார். அதன்படி, மோகன் கேப்ரியல் லஞ்ச பணத்தை முருகானந்தமிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் முருகானாந்தத்தை பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, தாசில்தார் உத்தரவின் பேரில், பணத்தை வாங்கியதாக கூறினார்.  இதையடுத்து தாசில்தார் பார்வதி (55), அவரது உதவியாளர் முருகானந்தம் (32) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்க லஞ்ச வாங்கிய தாசில்தார், உதவியாளர் பிடிப்பட்டது சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post பட்டா வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தார் கைது: உதவியாளரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: