கொழும்பு: இலங்கை யு-19 அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ‘டக் அவுட்’ ஆனார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர், இந்திய யு-19 அணியில் இடம் பெற்று தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். கொழும்புவில் நடக்கும் இந்தியா, இலங்கை யு-19 அணிகளுக்கு இடையேயான 4 நாள் போட்டியில் அர்ஜூன் களமிறங்கி உள்ளார். சச்சினின் மகன் என்பதால் அர்ஜூனின் செயல்பாடு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.போட்டியின் 3ம் நாளான நேற்று இந்திய யு-19 அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்திருந்த நிலையில் அர்ஜூன் களமிறங்கினார். 11 பந்துகளை சந்தித்த அர்ஜூன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய சச்சின் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போல, அர்ஜூனும் முதல் போட்டியில் டக் அவுட்டாகி உள்ளார்.