சென்னை: வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்க மறுத்த பெரியம்மாவை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோயில் 6வது தெருவை சேர்ந்தவர் ஜானகி (60). இவர் தனது தந்தைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டில் ஜானகியின் தங்கை சரஸ்வதி மற்றும் அவரது மகன் ராஜா (35) ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜா பல ஆண்டுகளாக வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கி கொடுக்க கோரி பெரியம்மா ஜானகியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அடிக்கடி பணம் கேட்டு ஜானகியை தொந்தரவு செய்தும் அடித்தும் வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜா, பெரியம்மா ஜானகியிடம் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜானகி, அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளிக்க புறப்பட்டார். அப்போது, ராஜா தனது பெரியம்மா ஜானகியை கல்லால் பின்பக்க தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த ஜானகி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.