டெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து செல்லதுரையை நீக்கிய நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செல்லதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. அவருடைய தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, துணை வேந்தர் செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் அந்தோணிராஜ் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். முதலில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.