பீஜிங்: வடகொரியாவில் பேருந்து கவிழ்ந்ததில் சீன சுற்றுலா பயணிகள் 32 பேர் உள்பட 36 பேர் பலியாகினர். வடகொரியாவிற்கு சுற்றுலா மூலம் ஆண்டிற்கு 2.9 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினரில் 80 சதவிகிதத்தினர் சீனர்கள் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சீனர்கள் வடகொரியாவிற்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு ஹவாங்கே மாகாணத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில், சீனாவில் இருந்து வடகொரியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சீன பயணிகள் 32 பேர் மற்றும் வடகொரிய நாட்டினர் 4 பேர் என 36 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 2 சீனர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.