வரும் ஜூன் மாதம் திறக்க திட்டம்: கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணி தீவிரம்; 4 மாதத்திற்கு முன்பே முடியும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கிண்டி கிங் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வரும் ஜூன் மாதத்திலேயே முழுமையாக கட்டப்பட்டு திறக்கும் வகையில் வேகமாக பணி நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் மற்றும் தேசிய முதியோர் நல மருத்துவமனையின் கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர், நிருபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ரூ.230 கோடியில், 5,53,582 சதுர அடியில் மருத்துவமனை கட்டப்படுகிறது. சென்னை மட்டும் அல்லாது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மருத்துவமனை அமைய உள்ளது.  இந்த கட்டிட பணிகளை முடிப்பதற்கான இலக்கு 2023 செப்டம்பர் மாதம். பொதுப்பணித்துறையின் அசுர வேகத்தால் இந்த பணி 4 மாதங்களுக்கு முன்னரே முடியும் தருவாயில் உள்ளது. வருகிற ஜூன் மாதத்திலேயே மருத்துவமனையை திறக்க தயாராக கட்டிடப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 4.98 ஏக்கர் நிலப்பரப்பில் பணிகள் நடக்கிறது. கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் வளைவுகள் அமைத்து பொதுமக்கள் வந்து செல்கின்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post வரும் ஜூன் மாதம் திறக்க திட்டம்: கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணி தீவிரம்; 4 மாதத்திற்கு முன்பே முடியும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: