திருவொற்றியூரில் பராமரிப்பின்றி பாழாகும் நீச்சல் குளம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் செலவில் நவீன நீச்சல் குளத்தை கட்டி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இங்கு பயிற்சியாளர் மூலம் மாணவர்கள், இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், அதன்பின் வந்த அதிமுக அரசு நீச்சல் குளத்தை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் நாளடைவில் நீச்சல் குளம் பயன்படாமலேயே போனது. தற்போது நீச்சல் குளம் பல காலமாக பூட்டி கிடப்பதோடு நீச்சல் குளத்தில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் சிதறி பயன்படுத்தப்படாமலேயே பாழாகிக் கொண்டிருக்கிறது. எனவே, நீச்சல் குளத்தை சென்னை மாநகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே சண்முகனார் பூங்கா உள்ளது. இங்கு காலை மாலை வேளையில் முதியவர்கள், பெண்கள் வந்து பொழுது போக்குவதோடு சிறுவர்கள் விளையாடுவார்கள். இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் சறுக்கு ஏணி பழுதடைந்து அதில் உள்ள இரும்பு தகடுகள் உடைந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால் சிறுவர், சிறுமியருக்கு காயம் ஏற்படுகிறது. மேலும் ஊஞ்சல்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. எனவே பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவொற்றியூரில் பராமரிப்பின்றி பாழாகும் நீச்சல் குளம் appeared first on Dinakaran.

Related Stories: