புதுடெல்லி, ஜூலை 28: வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், பிரபல பாலிவுட் நடிகையான சம்ரீன் கவுரைக் காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும், சம்ரீன் கவுரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அர்ஷ்தீப் சிங் ‘எனக்கான நபர்’ என பதிவிட்டு தங்கள் காதலை உறுதி செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பிறந்த சம்ரீன் கவுர், புனேவில் வணிகவியல் பட்டம் பெற்ற பிறகு 2018ம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதியடைந்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ‘83’, ‘சர்தார் ஜி 2’ ஆகிய இந்தி திரைப்படங்களிலும், ‘நெயில் பாலிஷ்’ வெப்தொடரிலும் நடித்துள்ள இவர், பாட்ஷா மற்றும் குரு ரந்தாவா ஆகியோரின் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஐ.பி.எல் தொடரின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளில் அரங்கிற்கு நேரில் வந்து அர்ஷ்தீப் சிங்கை, சம்ரீன் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்த நிலையில், தற்போது இருவரின் காதலும் முறைப்படி வெளிச்சத்திற்கு வந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
