எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘வாரணாசி’ என்ற பான்வேர்ல்ட் படம் உருவாகி வருகிறது. இதில் ருத்ராவாக மகேஷ் பாபு, கும்பாவாக பிருத்விராஜ் சுகுமாரன், மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். இப்படத்தின் பட்ஜெட் ரூ.1,400 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது. உலகம் முழுவதும் 20 மொழிகளில் டப்பிங் செய்யப்படும் இப்படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் பிரத்யேகமாக ஐமேக்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படப்பிடிப்புக்கு இயக்குனர் பிரேக் கொடுத்திருப்பதால், மகேஷ் பாபு தனது குடும்பத்தினருடன் பிரான்சுக்கு டூர் சென்றுள்ளார். இந்நிலையில் பிருத்விராஜ் சுகுமாரன் கூறுகையில், ‘இதுபோன்ற படங்களை உருவாக்கும்போது, பிரமாண்டம் என்பதையே குறைவாக கணக்கிடுவதாக இருக்கும்.
இதற்கு முன்பு நான் இப்படியொரு படத்தை பார்த்தது இல்லை. ராஜமவுலியும் இதையேதான் சொன்னார். 30 ஆண்டுகள் காத்திருந்து, தனது முதல் படத்தை போல் உருவாக்குகிறார். எங்களுக்கு காலை 7 மணிக்கு முதல் ஷாட் என்றால், ராஜமவுலி அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்புக்கு வந்து, உதவி இயக்குனர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார். நடிகராக, இயக்குனராக, மனிதனாக ‘வாரணாசி’ படத்தின் மூலம் நான் செழுமை அடைந்து வருகிறேன். முக்கிய காட்சியை மட்டும் சரியாக கொண்டு வருவதற்காக, சுமார் 90 ரீடேக் எடுக்க வேண்டியிருந்தது. அக்காட்சி முழுமை பெற ராஜமவுலி பொறுமையாகவும், நுணுக்கமாகவும் செயல்பட்டதை நன்கு உணர முடிந்தது. இப்படம் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
