- முதல் அமைச்சர்
- ஸ்ரீ லீலா
- மும்பை
- சர்வதேச யோகா தினம்
- மகாராஷ்டிரா
- தேவேந்திர ஃபட்னாவிஸ்
- அம்ருதா ஃபட்னாவிஸ்
- திவிஜா
மும்பை: சர்வதேச யோகா தினத்தையொட்டி மும்பையில் பிரமாண்டமான பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவியும், வங்கி அதிகாரியுமான அம்ருதா பட்னாவிஸ், அவரது மகள் திவிஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுடன் தென்னிந்திய படவுலகின் முன்னணி நடிகை ஸ்ரீலீலாபங்கேற்றார்.
அப்போது அங்கிருந்த ஏராளமான போட்டோகிராபர்கள், அவர்கள் மூவரையும் இணைத்து போட்டோ எடுக்க தொடங்கினர். இந்நிலையில் அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர், அம்ருதா பட்னாவிஸ் மற்றும் அவரது மகளை மட்டும் தனியாக போட்டோ எடுக்க விரும்புவதாக மராத்தி மொழியில் கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து அம்ருதா பட்னாவிஸ், ஸ்ரீலீலாவிடம் சற்று தள்ளி நிற்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே ஸ்ரீலீலாமுகம் வாடிய நிலையில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.
பிறகு அம்ருதா பட்னாவிஸும், திவிஜாவும் மட்டும் போஸ் கொடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதல்வரின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், ஸ்ரீலீலாவை அவமதித்துவிட்டதாக ஒருதரப்பினரும், அங்கிருந்த போட்டோகிராபரின் விருப்பத்துக்கு ஏற்பவே அம்ருதா பட்னாவிஸ் இவ்வாறு செயல்பட்டதாக மறுதரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஸ்ரீலீலாவின் ரசிகர்கள் அம்ருதாவை அவரது செயலுக்காக ஆவேசமாக விமர்சித்து வருகிறார்கள்.
