செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 2022ல் வெளியாகி ஹிட்டான படம், `கட்டா குஸ்தி’. தற்போது இப்படத்தின் 2வது பாகம் உருவாகி, வரும் ஜூலை 3ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள பேட்டியில், ‘இதற்கு முன்பு ஒரு பேட்டியில், பாலிவுட் சூப்பர் ஆக்டர் ஆமிர் கான் ஒரு விஷயத்தை பேசியிருந்தார். ‘சம்பளம் என்பது ஆண், பெண் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. உங்களால் எவ்வளவு டிக்கெட் விற்கிறது என்பதை மையப்படுத்தியது’ என்று. தியேட்டர்களில் எனக்கு அதிகமான டிக்கெட் விற்பனையாகும்போது, அதற்கான சம்பளத்தை நான் கேட்பேன். ஆனால், இப்போது யாருடனும் என்னை ஒப்பிட விரும்பவில்லை. எனவே, இப்போது நான் அதிக சம்பளம் கேட்க மாட்டேன்.
எனக்கென்று ஒருநாள் வரும், அப்போது எனது நியாயமான சம்பளத்தை உயர்த்தி கேட்பேன்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘நான் நடித்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் முதல் பாகத்தின் இடைவேளை பகுதியில், எனக்கு மாஸ் காட்சி வைத்திருந்தனர். அதை படமாக்க 1.2 கோடி ரூபாய் செலவு செய்தனர். அது ஹீரோயினுக்காக மட்டுமே படமாக்கப்பட்ட காட்சி. முதலில் அதுபற்றி நான் பிரமிப்பாக நினைக்கவில்லை. ஆனால், படம் வெளியான பிறகுதான் அதுபற்றிய பில்டப் அறிந்து ஆச்சரியப்பட்டேன். தியேட்டர்களில் அந்த சீனுக்கு அதிபயங்கரமான கைத்தட்டல் கிடைத்தது’ என்றார்.

