ஐதராபாத்: தெலுங்கு திரையுலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தெலங்கானா மாநில திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் சதவீத முறையில் மட்டுமே இனி தியேட்டர்களில் படங்களைத் திரையிடுவோம் என தியேட்டர் அதிபர்கள் கூறினர். ஏப்ரல் 3 முதல் ஐதராபாத்தில் உள்ள 23 தியேட்டர்கள் இந்த முறையில் படங்களைத் திரையிட ஆரம்பித்துவிட்டன. அதற்கு தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடப்பு தயாரிப்பாளர் கில்டு இது குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் முதல் வாரத்தில் 60, இரண்டாவது வாரத்தில் 50, மூன்றாவது வாரத்தில் 40 சதவீதம் என்ற முறையில் படங்களை வெளியிட விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்கள். ஏற்கெனவே உள்ள முறையில் படங்களைத் திரையிடவே விருப்பம் என்றும் கூறியுள்ளார்கள். புதிய முறையால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தெலங்கானா திரைப்பட வர்த்தக சபைக்கு இது குறித்து அனுப்பியுள்ள கடிதத்தில் முன்னணி தயாரிப்பாளர்கள் 16 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
