கடலை மையப்படுத்திய முழுநீள எமோஷனல் திரில்லராக படம் உருவாகியுள்ளது. நாகர்கோவில் பின்னணியில் கதை நடக்கிறது. நடுக்கடலில் ஒரு போட்டில் தனது சமூக விரோத சாம்ராஜ்யத்தை நடத்தும் சரத்குமார், ஏழை குடும்பத்தை சேர்ந்த வையாபுரியின் மகன் இந்திரஜித் ஜெகனும், தனது மகள் தேவிகா சதீஷும் காதலிப்பதை அறிந்து கொதிக்கிறார். அதன் பின், இந்திரஜித் ஜெகனுடன் நேரடியாக மோதுகிறார். நடுக்கடலில் நடக்கும் மோதல்களுக்கு என்ன தீர்வு என்பது மீதி கதை. இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில், மாறுபட்ட தோற்றத்தில் சரத்குமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இளம் காதலர்களாக இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ் யதார்த்தமாக நடித்துள்ளனர். வையாபுரிக்கு குணச்சித்திர வேடம். தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி, நிகில் முருகன் ஆகியோரும் திறம்பட நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். அவரது உழைப்பு, சில மணி நேரம் நடுக்கடலில் வாழ்ந்த அனுபவத்தை கொடுக்கிறது. ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவில் நாகர்கோவில் கடற்பகுதி ரம்மியமாகவும், அப்படியே பயமுறுத்துவதாகவும் இருக்கிறது. மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். இருவரையும், நடுக்கடலையும், போட்டையும் மையப்படுத்தி மாறுபட்ட ஒரு படத்தை கொடுத்துள்ளார். கிளைமாக்ஸில் அதிக கவனம் செலுத்த தவறிவிட்டார்.

