கட்டாக்: ஒடிசாவில் மனைவியை கொன்ற நடிகருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஒடிசாவின் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகையான லட்சுமிப்பிரியா பெஹரா எனும் நிகிதா, கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியன்று கட்டாக் நகரில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவரான நடிகர் லிபன் சாஹு, நிகிதாவை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகிதாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லிபன் சாஹு மற்றும் அவரது பெற்றோர் மீது இந்த வழக்கு பதியப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கட்டாக் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. அதில், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக நடிகர் லிபன் சாஹுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

