×

அனுபமாவை கண்கலங்க வைத்த ஆடு

தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அசைவ உணவு சாப்பிடுவது குறித்து அவர் கூறுகையில், ‘மட்டன் சாப்பிட்டு நான்கு வருடங்களாகி விட்டது. நான் மட்டன் சாப்பிடுவதை தடுத்து நிறுத்த காரணமாக ஒரு சம்பவம் நடந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ‘கார்த்திகேயா 2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஆடுகளை வளர்க்கும் ஒரு பட்டி இருந்தது.

படப்பிடிப்பு இடைவெளியில் அங்கிருந்த ஆடுகளுடன் நான் சந்தோஷமாக விளையாடினேன். ஒருநாள் எங்களுக்கு படப்பிடிப்பில் மட்டன் பிரியாணி, குழம்பு பரிமாறப்பட்டது. அன்று மாலை எனது உதவியாளர் மூலமாக, அன்று மதியம் எங்களுக்கு பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணி, நான் எந்த ஆட்டுடன் விளையாடிக் கொண்டிருந்தேனோ, அதையே வெட்டி உணவாக்கி இருக்கின்றனர் என்ற விஷயம் தெரிந்தது. அன்று முழுவதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அன்று முதல் மட்டன் சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன்.

அதற்கு பிறகு என் வீட்டில் கூட மட்டன் சாப்பிடும்படி வற்புறுத்தி கேட்டபோது, இனிமேல் நான் மட்டன் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். அந்த ஆட்டை இப்போது நினைத்தாலும் நான் அப்செட்டாகி, கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது’ என்றார்.

Tags : Anupama Parameswaran ,Bollywood ,
× RELATED 4த் ஃப்ளோர் விமர்சனம்…