கர்நாடகாவின் மலைப்பகுதியில் தொடர்ச்சியாக நடக்கும் கொடூரமான கொலைகளை துப்பறியும் இன்ஸ்பெக்டர் சீதாராமின் (விஜய ராகவேந்திரா) வழக்கு விசாரணை குறித்த பயணமாக படம் உருவாகியுள்ளது. மனநிலை பாதித்த நோயாளிக்கும், இந்த கொலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதை சீதாராம் எப்படி கண்டுபிடிக்கிறார்? அவரது கடந்த கால வாழ்க்கை, இந்த கொலை வழக்கில் எப்படி குறுக்கிடுகிறது என்பது மீதி கதை.
விசாரணை அதிகாரியாக முழு படத்தையும் தனது தோளில் சுமந்து அசத்தியிருக்கும் விஜய் ராகவேந்திராவுக்கு இப்படம் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமையும். அவரது நிதானமான, யதார்த்தமான, நியாயமான விசாரணை அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. செபாஸ்டியனாக கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, தனது பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். சீதாராமின் சகோதரியாக உஷா பண்டாரி உள்பட, அந்தந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ஆச்சார்யா பாராட்டுக்குரியவர். படத்தின் இன்னொரு ஹீரோ, மலைப்பகுதியிலுள்ள லொகேஷன்கள். நவனீத் ஷாமின் பின்னணி இசை, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் மெதுவாக நகரும் எண்ணம் ஏற்பட்டாலும், அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் பரபரப்பை ஏற்படுத்துகிறது. கிரைம் திரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு திருப்தி தரும் படத்தை தந்துள்ளார் இயக்குனர் தேவி பிரசாத் ஷெட்டி.
